CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, April 11, 2008

தப்பித்தும் மரணிக்கிறேன்...

அர்த்தராத்திரியொன்றில் முடிகிறது எனக்கான
அலுவல் வேலைகளும் அதனூடான உளைச்சல்களும்
கயிறவிழ்த்து தாயின் மடிநோக்கியோடும் கன்றைபோல
கண்களின் தூக்கத்தினூடே பயணிக்கிறேன்..

அரசின் நெடுஞ்சாலைதிட்டம் வேக வேகமாய்
அரங்கேறிகொண்டிருக்கிறது சாலையில் இருபுறமும்
உணவுக்காய் கண்விழித்து இரைதேடும் ஆந்தையாய்
உழைத்துகொண்டிருக்கும் மனிதர்கள் சுறுசுறுப்பாய்

சாலைப்பணிகள் விரைவாகுதையெண்ணி மகிழ்ச்சி
சாப்பாட்டுக்காய் உழைக்கும் இவர்களையெண்ணி கவலை
மாறி மாறி மனதினுள் படையெடுத்துகொண்டிருக்க
காதை கிழிக்கும் காற்றொலிப்பான் பின் தொடர

அதிர்ந்து போய் திரும்பிபார்த்தேன்
நிலைதவறி வரும் கனரகவாகனமொன்று
என்னை நோக்கி வேகமாய் வரவே
திடுக்கிட்டு சாய்க்கிறேன் சாலையோர பள்ளத்தில்..

தப்பித்த மகிழ்வோடு எழுந்து நிற்க அடுத்தநொடி
அலறலோடு அழைக்கிறது நிறைய குரல்
தூக்குகண்ட கைதியாய் பதறிப்போய் பார்க்கையில்
தூக்ககூட நாதியின்றி பாதைசமைத்தவர் சிதறிபோய் கிடக்கையில்

உயிர் தப்பியும் மரணித்தேன் மறுபடியும்.....

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: