CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, May 29, 2008

எழுதப்படாமலே.....

தேர்விற்கு படிப்பதாய் சொல்லிவிட்டு
பக்கங்கள் புரள்கிறது நேற்றுவரை
புன்னைகையை மட்டுமே சிந்தியவள்
இன்று வார்த்தைகளை உதிர்த்த நினைவுகளோடு..

மௌனஓடையின் அலம்பலில் கண்ட
உதடு சுழித்தல்களை வர்ணிக்க
வார்த்தைகள் தேடும் என் எழுதுகோல்....

கற்பனையில் மிதந்து கவிதை
தேடும் என் சிந்தனை மேல்
எச்சத்தை உமிழ்ந்து போகிறது

எதிர்பார்ப்புகளோடு பால்கொடுக்க சொல்லும்
தந்தையின் வார்த்தைகளின் முடிவில்
பாலோடுநிற்கும் தாயின் அன்பு...

வார்த்தைகள்....

துயிலுரித்த கணங்களிலிருந்து
துரத்தும் வார்த்தைகள் வணக்கங்களாகும்
விசாரிப்புகளாய் உருவெடுக்கும்
தருணங்களில் காரணமில்லாமல்
தேவையற்றதாய் போகும் சில..

உதட்டோடு நின்றுபோகும் புன்னகையை
பதிலுக்கு கக்கிவிட்டு இடம் பெயர்கையில்
கோபத்தொனியில் தொற்றிகொள்ளும்
வீம்புகளுக்கு முறைத்தலையும்
கோபத்தையும் கனையாக்கி திரும்புகையில்

எதிர்பார்ப்புகளினூடான விமர்சனங்கள்
விருவிருப்பாக்கும் பொழுதுகள்
நன்றிகளை நவின்று நகரும்..

அஸ்தமிக்கும் பொழுதோடு சேர்ந்து
முடியும் மீண்டும் வணக்கங்களாய்
இரவின் தனிமையின் வெறிக்கும்
பொழுதின் வார்த்தைகளானது
உதிரும் மயிர்களாகவும்
ஊன்றும் விதைகளாகவும்
கலந்தே விழுகிறது ....

இன்ப துன்பத்தை போல....

Friday, May 2, 2008

தேடலில்....

தொடரும் தோல்விகளின் இறுக்கத்தில்
படும் அவஸ்தைகளில் நொறுங்கும்
மனத்தினூடே வெறுத்துப்போகும் வாழ்க்கை.

எதிர்பார்த்தவைகள் கிடைக்காத கோபத்தில்
தற்கொலையை நாடவிழையும் மனம்
தனிமையை தேடி அலையும் பொழுது

திரவத்தினை கயிறுதிரித்து வலைபின்னும்
சிலந்தியொன்று இடறலினால் கீழுக்கு
தொங்கிகொண்டிருத்தலை நோக்கிய சிந்தைக்கு

கஜினியின் வரலாறு பாடத்தை
நினைவிலிருத்தி போகிறது.
தொடர் சறுக்கலில் முயற்சியூடான
சிலந்தியின் வெற்றி....