CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, July 19, 2009

நேசம் முறிந்த பகலுக்கான இரவொன்றில்...




எதிர்வீட்டுக்காரனின் வாயால்
உதைபட திராணியற்று பண்பலையின்
தொண்டையை அறுத்துவிட்டு
வறண்டுகிடக்கும் வெறும்குடலினை
மல்லாக்கவோ
குப்புறப்படுக்கவைத்தோ
ஒப்பாரி வைத்துச்சென்றது சிகரெட்...
இரைச்சல்களூடான யாருமற்ற
நிசப்தத்தில் நாளைக்கு போதையில்
ஆழ்த்திவிடுவதாய் ஆறுதல் சொல்லிவிட்டு
அறையின் மூலையில் கிடந்தது
கோபமாய் வீசியெறியப்பட்ட சட்டைப்பை...

நாளையோ அதற்கடுத்தநாளோ
ஏதாவதொரு கொலையை அல்லது
தற்கொலையை செய்துமுடிக்குமாறு
கட்டளையிட்டவாறு விசும்புகிறது மனது...
எந்தக்காரணங்களுமின்றி
எனை சல்லடையாக்கிய அவளின்
வார்த்தைகளின் தாக்கம் குறைவதாயில்லை


Wednesday, July 15, 2009

என் இரக்கத்திற்குரிய ஒரே கடவுளுக்கு!


பொழுதுபோக்கிற்காகவோ
பிழைப்பு நடத்துவதற்காகவே
என் பாதங்களில் நசுங்கி மடியும்
சிற்றுயிரிலிருந்து என் கண்களுக்கு
எட்டாத கிரகங்கள் என எல்லாமும்
படைத்துவிட்டு எங்கேயோ போய்
முகம் மறைத்துக்கொண்டு இருக்கிறாய்!

நீ எனக்கு படைத்த புலன்களை
வரைந்துவிட்டு உன்னை யாம் படைத்து
உன்னிலிருந்தே ஆரம்பித்தோம் எம்மில் பிரிவுதனை!

மதமென்னும் வாளெடுத்துக்கொண்டு
வெட்டி வெட்டி பிரித்தோம்!
உயிர்களை மட்டுமல்ல
இனம் அதற்கொரு மொழி என்று
பலப்பல இத்யாதிகளாய் பிரிந்தோம்!

நீ இயற்கையாய் தரும் மரணங்களையும்
தாண்டி நாமே செயற்கையாய் தருகிறோம்
எமக்கு பிடிக்காதவனுக்கோ
அல்லது பிடிக்கொடுக்காதவனுக்கோ!


இது எல்லாவற்றையும் நீ பார்த்துகொண்டிருப்பதாய்
நாம் வைத்த பெயர்களோடு எம்மவர்களே
உன்பெயரில் அருள்வாக்கு தந்துகொண்டிருக்கிறார்கள்!

என் காதலியின் அழிச்சாட்சியத்தில்
தொலைந்துபோன என் காதலின் முடிவிலிருந்து
நீ இல்லவே இல்லை என்று வாதிட்டுகொண்டிருந்த
எனக்கும் ஏனோ உன் மேல் இரக்கம்
வரத்தொடங்கியிருக்கிறது இப்போதெல்லாம்!

ஆம்
என் இரக்கத்திற்குரிய கடவுளே!

உன்னை மையப்படுத்தியே சுழலவேண்டிய
உலகம்
உன்மேல் பழிசுமத்தியே சுழன்றுகொண்டு
இருக்கிறது!

ஒருவேளை உன் கண்கள் குருடாயிருந்தாலும்
நான் கண்தானம் செய்துவிட்டு இறந்துபோகிறேன்!

எடுத்துப்பொருத்திக்கொண்டு
இங்கு வந்துதான் பார்த்துவிட்டுப்போயேன்
உன் படைப்பின் அவலத்தை!

Friday, July 10, 2009

தனிமையில் உன்னுடன்....


நெரிசல்களோடான
என் பயணத்தில் எனை ஆட்கொண்ட
தனிமையின் நினைவில்
ஏதோ ஒரு பிரதேசத்தில்
கைக்கோர்த்தபடியே நடந்துகொண்டிருந்தோம்!
ஒருகையில் உன் விரல்களை
பின்னிக்கொண்டு
ஒரு கையில் செவ்வானத்தை
இழுக்கமுற்படும் என் மௌனங்களின்
சப்தம் யாருக்குமே கேட்டிருக்கவாய்ப்பில்லை!
உன்னை உரசியபடியே
அதோ தூரத்தில் பறக்கும் அவ்விரு
பறவைகளின் நேசத்தையும்
உனையே சுழலும் என் காதலையும்
என்னுடன் பயணிப்பவர்களுக்கோ
உனக்கோ தெரிந்திருக்கவாய்ப்பில்லை!
ஏனோ உனக்கு தெரியப்படுத்தவும்
எனக்கு தெரியவில்லை!