CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, August 19, 2009

ரசிக்கவியலாத மழை....

காதலியுடன் உரையாடியவாறு மொட்டைமாடியிலேயே கவிழ்ந்துபோன தலையை தட்டி எழுப்பி அலுவலகம் கிளம்புடா நேரம் ஆயிடுச்சுன்னு அம்மா
சொல்லிமுடித்த நிமிடத்திலிருந்து சிறிதாய் ஆரம்பித்த தூரலில் நனைந்தவாறே அரைமணிநேரத்தில் அலுவலுக்கான வேடம் பூண்டு கிளம்பிவிட்டேன்!

அடுத்த சிலநொடிகளில் தாமதமாவது கூட தெரியாமல் தூங்குகிறாயே என்று வானம் கொஞ்சம் வேகமாய் தான் கொட்டத்தொடங்கியது! ஏற்கனவே நனைந்து காய்ந்திராத என் முடிகள் மேலும் நனையத்தொடங்கியதில் காதலியின் நேற்றைய முத்தத்தினை கதகதப்புக்காய் கடன் வாங்கிக்கொண்டிருந்தது நினைவுகள்!

மெல்லிய புன்னகையானது எனக்கு மட்டும் உரித்தானதாய் நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொண்டே தொடர்ந்த ஈருருளி பயணத்திற்கு விளக்கேதும் தேவையில்லை என்பதாய் வெளிறத்தொடங்கியது வானம்!

அவளும் இந்நேரம் விழித்திருப்பாள் ..அதனால் தான் எனக்கு வெளிச்சம் வந்துவிட்டதாய் அல்பமாய் சிந்தித்துக்கொண்டிருந்த மனதில் ஏனோ அவளின் முகத்தை நேரில் காணமுடியாத ஒரு வருத்தமும் சிலமழைத்துளிகளின் மூலமாய் வந்து ஒட்டிக்கொண்டிருக்கலாம்!

அவைகளை துடைத்தெறியும் எண்ணமேதுமின்றி நண்பனிடம் ஈருருளியை கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறி யாருமற்ற பின்புற இருக்கையில் உட்கார்ந்துக்கொண்டு ஜன்னலோரத்தில் ஒழுகிக்கொண்டிருந்த சில மழைத்துளிகளை தொட்டு தொட்டு கீழ் தள்ளி ரசித்துக்கொண்டிருந்தேன்!

சிலமைல் தூரத்திற்கு அப்பால் ஒரு பேருந்துநிறுத்தத்தின் அருகில் ஒரு பெண்மனியின் அழுக்குச்சேலையை போர்வையாக்கி என்னசெய்வதென்று புரியாமல் இங்குமங்குமாய் விழிந்த்துக்கொண்டிருந்தது அவளின் காலுக்கு கீழ் நான்கு கண்கள் ..மொத்தமாய் நனைந்துபோன கற்றை கற்றையான அந்த ஒட்டிய முடிகள் ஏதோ ஒரு விளம்பரத்திற்கு வரும் நாயகனின் தலையை ஒத்திருந்தது!

மெல்லமாய் தலைமுடியிலிருந்து வழியத்தொடங்கிய மழைத்துளிகளோடு
கலந்து கொண்டிருந்த ஆறுகண்களின் உப்புநீரை பார்த்து கதறத்தொடங்கிய பேருந்து நகர்ந்தும் அங்கேயே நகராமல் நின்று கொண்டிருந்த மனமானது
அதுவரை சன்னலோடு விளையாடிக்கொண்டிருந்த விரல்களை மெல்லமாய்
உள்ளிழுத்துக்கொண்டு அமைதியானது!

மதமெனும் பெயரில் புனையப்பட்ட கற்சிலைகள் அல்லாததொரு எனக்கான கடவுளொன்று இருப்பதாய் இன்று வரை நான் வணங்கிக்கொண்டிருக்கும் ஒரு உருவமற்ற கடவுளிடம் இவர்களுக்காய் வேண்டத்தொடங்கினேன்!

"இறைவா ! இந்த மழையொன்றும் அவ்வளவாய் ரசிக்கத்தகுந்ததாய் இல்லை"

Tuesday, August 18, 2009




*
உன்
இமைகள் திறப்பதனாலேயே
என்
பொழுதுகள் விடிகிறது!

*
உன்
இதழ்கள் திறப்பதனாலேயே
என்
மொழிகள் பிறக்கிறது!

*
இரவும்
பகலும்
உன் இமைகளால் நிர்ணயிக்கப்படுகிறது!

மொழியும்
மௌனமும்
உன் இதழ்களால் உருவாக்கப்படுகிறது!

*
நீ
எனக்கு கொடுத்த
முத்தத்தின் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளவே
சூரியனும் தன் கதிர்களை
நீட்டியிருக்கலாம்!

ஓசோனின்
ஓட்டைக்கு உன் முத்தமும்
காரணம் தான்!

*
என்
உயிருக்குள் புதைக்கப்பட்ட
அந்த முதல் முத்தத்தினை
எதாலும் தொடமுடியாத படி
ஒளித்துவைத்திருக்கிறது காதல்!

*
அந்த
முத்தத்தின் இனிமையை
மாதிரியாய் கொண்டே என்னால்
பலமுத்தங்கள் தரமுடிகிறது!

*
உன்
இதழ்களிலிருந்து
வருபவை போலில்லை என்று
திட்டி தீர்க்கிறது
என் முத்தம்!

*
ஒரு
முறை உன்னிதழிலிருந்து
என்னிதழுக்கு இனிமையை
ஒட்டிக்கொள்ளவா?

*
"ச்சீ போடா"
என்று மெல்லமாய் தலைத்தூக்கி
விழிமூடி கிடக்கையில்
சட்டென திருடிக்கொள்கிறது
என்னிதழ்கள்
உன் இனிமையை!

*
"இவ்ளோ தானா" என்று
நீ உதட்டை பிதுக்கும் போது
ஒரு சில முத்தங்களை
காற்று திருடிக்கொண்டிருக்கலாம்!

*
காற்றோடு
மல்லுக்கட்டி நானே
ஜெயித்துவிடுகிறேன்!
இடைவெளியில்லாமல்
இதழ் பதித்தவாறு........

*
நம்
இருவரின் முத்தத்தையும்
மூச்சிலிருந்து உள்வாங்கி
வீசத்தொடங்கியதால் தான்
காற்றின் பெயர் தென்றல்..

*
நீ
தரும் முத்தங்கள்
தன்னை விட இதமாய் இருக்கிறதென்று
பொறாமையில் வேகமாய்
வீசுவதனால் தான்
தென்றலின் பெயர் புயல்...

*
உலகுக்கே
உயிரூட்டும் காற்றுக்கு
பலப்பரிமாணங்களை தரும்
நம் காதல் கடவுள்!



*